மெல்போர்ன்: ஆஸி அணியின் தற்போதைய கேப்டன் டிம் பெயினை தற்காலிக கேப்டன் எனக்கூறி இந்திய வீரர் ரிஷப் பண்ட் விமர்சித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா 1 வெற்றியை பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 443 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதஹனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் 292 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி 106 ரன்களில் டிக்ளர் செய்தது. இதனையடுத்து 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. இந்திய அணியினரின் வேகப்பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்நிலையில் 6-வது வீரராக ஆஸி அணியின் தற்போதைய கேப்டன் டிம் பெயின் களமிறங்கினார். அப்போது ரிஷப் பண்ட், டிம் பெயின் குறித்து பேசியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. டிம் பெயினை விமர்சித்து அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் டிம் பெயின் ஆஸ்திரேலியாவின் தற்காலிக கேப்டன் என்றும் அவருக்கு பேச மட்டும் தான் தெரியும் விளையாட தெரியாது என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக இந்திய அணி 2-வது இன்னிங்சில் விளையாடியபோது ரிஷப் பண்ட்டை, டிம் பெயின் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பண்ட் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி